Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை டூ திருவள்ளூர் சைக்கிளிங் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு

அக்டோபர் 17, 2021 04:51

சென்னை;  தமிழக டிஜிபி சைலேந்திர பாபு டிஜிபியாக பொறுப்பேற்றது முதல் மிகவும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் தனது பணியை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில்,  சென்னையில் இருந்து இன்று காலை திருவள்ளூருக்கு சைக்கிளிங் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு அங்குத் தீயணைப்புத் துறை வீரர்களைச் சந்தித்துப் பேசினார்.

அதைத் தொடர்ந்து திருவள்ளூர் கிராமிய காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் டிஜிபி சைலேந்திரபாபு திடீரென ஆய்வு செய்தார்.

அங்குக் கோப்புகள் முறையாகப் பாதுகாக்கப்படுகிறதா, எஃப்ஐஆர் உரிய விதிமுறைகளைப் பின்பற்றிப் பதிவு செய்யப்படுகிறதா போன்றவற்றை அவர் ஆய்வு செய்தார். பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள கம்பியூட்டர் அறை, ஆய்வாளர் அறைகளுக்கும் சென்று அவர் ஆய்வு செய்தார்.

அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்த அவர், போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து காவலர்களின் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்த அவர், போன் பறிப்பு உள்பட குற்றச் சம்பவங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து காவலர்களின் கோரிக்கைகளான பணியிட மாற்றம் மற்றும் இதர குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் அங்கிருந்து நேரடியாக போலீஸ் குடியிருப்புக்குச் சென்ற அவர், அங்குள்ள போலீஸ் குடும்பங்களைச் சந்தித்து போலீஸ் குடியிருப்பு வசதிகள், சரி செய்ய வேண்டிய குறைகள் ஆகியவை குறித்து விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

பின்னர் அங்கிருந்த குழந்தைகளைச் சந்தித்துக் கலந்துரையாடிய டிஜிபி சைலேந்திரபாபு, அவர்களுக்குப் புத்தகங்களையும் பரிசாக வழங்கினார்.

மேலும் காவலர்களின் குழந்தைகள் சிலம்பாட்டத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து ஊக்கப்பரிசும் அவர் வழங்கினார். இது முடிந்த பிறகு அங்கிருந்து ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள பூண்டியில் உள்ள நீர்த்தேக்கத்திற்குச் சுற்றிப் பார்க்கத் தனது சைக்கிளிங்  பயணத்தைத் தொடர்ந்தார்.

இந்த ஆய்வின் போது அவருடன் பல்வேறு போலீசாரும் உடன் இருந்தனர்.


தலைப்புச்செய்திகள்